செய்திகள்
செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர்வெளியேற்றம் 651 கன அடியாக குறைப்பு

Published On 2021-11-19 09:05 GMT   |   Update On 2021-11-19 09:11 GMT
ஏரியை சுற்றிள்ள பகுதிகளிலிருந்து மழை நீர் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.




பூந்தமல்லி:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

இதனால் பாதுகாப்பு கருதி 7-ந் தேதி 5 கண் மதகு வழியாக முதற்கட்டாக 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் ஏரிக்கு நீர்வரத்து அதிகளவில் வந்துகொண்டிருந்தால் உபரி நீர் வெளியேற்றம் படிப்படியாக உயர்ந்த்தப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2717 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 20.46 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

சென்னையில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஏரியில் இருந்து நேற்று 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கன மழை இல்லாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 2700 கனஅடி தண்ணீர் வருகிறது. இதையடுத்து ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது. 651 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. எனினும் ஏரியை சுற்றிள்ள பகுதிகளிலிருந்து மழை நீர் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News