ஸ்ரீமுஷ்ணம் அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய ஆற்றை நீந்தி கடக்கும் பொதுமக்கள்
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரமங்கலம் பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக அந்த பகுதியில் உள்ள வெள்ளாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அந்தப்பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்தவற்கு இந்த ஆற்றை கடந்து தான் மயானத்துக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது.
தற்போது அந்த பகுதியை சேர்ந்த சங்கரன் என்பவர் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அந்த பகுதி பொதுமக்கள் இறந்த சங்கரனின் உடலை சுமந்தவாறு ஆற்றில் நீந்தி மறுகரைக்கு சென்று மயானத்தில் சங்கரனின் உடலை அடக்கம் செய்தனர்.
இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறியதாவது:-
இந்த பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு வெள்ளாற்றை கடந்து தான் மயானத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே எங்களுக்கு வெள்ளாற்றை கடந்து செல்ல இந்த பகுதியில் பாலம் அமைத்து தரவேண்டும். இல்லை என்றால் எங்கள் பகுதியிலேயே மயானத்துக்கு இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று சம்மந்தபட்டதுறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக வெள்ளாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு எங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் வெள்ளாற்றில் இறங்கி நீந்தியபடி இறந்தவர்களின் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்து வருகிறோம்.
இதே நிலை நீடித்தால் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வசிக்கின்ற பொதுமக்களை ஒன்று திரட்டி சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.