செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

18-ந்தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்: நாளை முதல் பலத்த மழை பெய்யும்

Published On 2021-11-16 07:53 GMT   |   Update On 2021-11-16 10:05 GMT
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு திசை நோக்கி நகர்கிறது.

இது வருகிற 18-ந்தேதி தெற்கு ஆந்திரா- வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும். நாளை (17-ந்தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யும்.

ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

18-ந்தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும் பெய்யும்.



சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கடலூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.

19-ந்தேதி அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.

20-ந்தேதி திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்கள் புதுவை, காரைக்கால், பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணிநேரத்துக்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News