செய்திகள்
மாமனார், மருமகன் பலி

நெமிலி அருகே வி‌ஷ வாயு தாக்கி மாமனார், மருமகன் பலி

Published On 2021-11-13 09:05 GMT   |   Update On 2021-11-13 09:05 GMT
நெமிலி அருகே வி‌ஷ வாயு தாக்கி மாமனார், மருமகன் பலியான சம்பவம் அவலூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 54) விவசாயி. இவர் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்தார். கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருவதால் விவசாய கிணற்றில் மோட்டார் பழுதானது.

மின் மோட்டாரை சரி செய்வதற்காக அவரது மருமகன் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் சுபாஷ் (24) என்பவரை அழைத்துக்கொண்டு நேற்று விவசாய நிலத்துக்கு சென்றனர்.

இருவரும் கிணற்றில் இறங்கி மோட்டாரை சரி செய்யும் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வி‌ஷவாயு தாக்கியதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் உடல்கள் கிணற்றில் மூழ்கியது.

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தேடிச் சென்றனர். அப்போது விவசாய கிணற்றின் அருகில் துணி பொருட்கள் இருந்தன. இதனால் அவர்கள் கிணற்றுக்குள் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து ராணிப்பேட்டை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேரம் போராடி 2 பேரின் உடல்களை மீட்டனர். அவலூர் போலீசார் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விவசாய கிணற்றில் வி‌ஷவாயு தாக்கியது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் மின்சாரம் தாக்கி இறந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அவலூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News