செய்திகள்
ரூ. 6.70 லட்சம் காசோலையை நகராட்சி ஆணையாளர் விநாயகத்திடம் ஜவுளி உற்பத்தியாளர் முருகேசன் வழங்கிய போது எடுத்த படம

நமக்கு நாமே திட்டத்தில் பல்லடத்தில் பள்ளி கட்டிடம் கட்ட ரூ.6.70 லட்சம் வழங்கிய ஜவுளி உற்பத்தியாளர்

Published On 2021-11-12 13:02 IST   |   Update On 2021-11-12 13:02:00 IST
நகர்ப்புறங்களில் இந்தத்திட்டத்தின் கீழ் ஏதாவது பணி செய்ய அந்த பகுதியை சேர்ந்த உள்ளூர் அமைப்பினர் மூன்றில் ஒரு பங்கு நிதி வழங்க வேண்டும்.
பல்லடம்:

தமிழக அரசு அறிவித்துள்ள நமக்கு நாமே திட்டம் 2021-2022 பல்லடம் நகராட்சியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நகர்ப்புறங்களில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்துதல், பூங்கா அமைத்தல், மரம் நடுதல், பள்ளிகளை மேம்படுத்துதல், பொது சுகாதாரம்,சாலை வசதி மேம்படுத்துதல், விளையாட்டுத் திடல், உடற்பயிற்சிக் கூடம், தெருவிளக்கு அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், அங்கன்வாடி, நூலகம், சமுதாய கூடம் கட்டுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படும்.

நகர்ப்புறங்களில் இந்தத்திட்டத்தின் கீழ் ஏதாவது பணி செய்ய அந்த பகுதியை சேர்ந்த உள்ளூர் அமைப்பினர் மூன்றில் ஒரு பங்கு நிதி வழங்க வேண்டும். இந்த திட்டத்திற்கு அரசு மூன்றில் இரண்டு பங்கு நிதி வழங்கும், 
இதன்மூலம் நகர்ப்புறங்களில் தேவைப்படும் திட்டங்களை அரசு மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் செயல்படுத்த முடியும், பல்லடத்தில் இந்த திட்டங்களை செயல்படுத்த விருப்பமுள்ள உள்ளூர் அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்லடம் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என நகராட்சி ஆணையாளர் விநாயகம் அறிவித்திருந்தார் .

இதன்படி பல்லடம் ராயர்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.20 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது .இதில் மூன்றில் ஒரு பங்கான ரூ.6.70 லட்சத்தை பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் முருகேசன் செலுத்த முன்வந்தார். இதையடுத்து பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகத்திடம் ரூ. 6.70 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் ஜான் பிரபு, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி கட்டிடத்திற்கு நிதி வழங்கிய ஜவுளி உற்பத்தியாளரை அந்தப்பகுதி மக்கள் பாராட்டினர். 
Tags:    

Similar News