செய்திகள்
மழை பாதிப்பு - சமூக வலைதளங்களில் தகவல் அளிக்க எம்.எல்.ஏ., வேண்டுகோள்
திருப்பூர் நகர பகுதியில் மழை பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் உரிய வடிகால் இல்லாத பகுதிகள், தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது.
திருப்பூர்:
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 40 சதவீதத்துக்கும் மேல் அதிகமாக பெய்து வருகிறது. சாதாரண மழை பெய்தால் கூட தாக்குப் பிடிக்காத திருப்பூர் நகர் அதிக மழைப்பொழிவால் திணறி வருகிறது. பருவ மழையை எதிர்பார்த்து மாநகராட்சி பகுதியில் கடந்த மாதம் சிறப்பு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் திருப்பூர் நகர பகுதியில் மழை பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் உரிய வடிகால் இல்லாத பகுதிகள், தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. வளர்ச்சி பணிகளுக்காக தோண்டிய குழிகள் முறையாக மூடப்படாமல் பல இடங்கள் சேறும் சகதியுமாக மாறி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மழை பாதிப்பு குறித்து, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மாநகராட்சி பகுதியில் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை கேட்டு கொண்டார்.
இதுதவிர ‘திருப்பூர் நலன் காப்போம்‘ என்ற பெயரில் மழை பாதிப்பு குறித்து சமூக வலை தளங்களில் தகவல் அளிக்கலாம் என்றும், அவ்வாறு தகவல் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எம்.எல்.ஏ., செல்வராஜ் தெரிவித்துள்ளார்.