செய்திகள்
கொள்ளை

ஜோலார்பேட்டை அருகே தனியார் நிறுவன பெண் ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

Published On 2021-11-10 19:02 IST   |   Update On 2021-11-10 19:02:00 IST
ஜோலார்பேட்டை அருகே தனியார்நிறுவன பெண் ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அருகே உள்ள வெங்கட்ட ரெட்டி தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மனைவி மீனா (வயது 44). கமலக்கண்ணன் இறந்துவிட்டார். மீனா இடையம்பட்டி பகுதியில் உள்ள ஊதுபத்தி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். இவரது மகள் கனிமொழி (23) சென்னையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். மற்றொரு மகள் தனலட்சுமி (21) சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட விடுமுறையில் தங்களது சொந்த ஊருக்கு வந்தனர். பின்னர் கனிமொழி, தனலட்சுமி, தோழி இந்துபிரியா ஆகிய 3 பேரும் சென்னைக்கு செல்ல நேற்று அதிகாலை 3.30 மணிக்கு வீட்டில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு சென்றனர். அவர்களை வழியனுப்ப மீனா சென்றுள்ளார்.

அப்போது மீனா கதவை பூட்டாமல், சாத்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மகள்களை ரெயிலில் ஏற்றி விட்டு மீனா வீட்டுக்கு வந்த போது கதவு திறந்திருந்தது. பீரோவும் திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 15¼ பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் திருட்டு போயிருந்தது.

இது குறித்து மீனா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News