செய்திகள்
உடுமலையில் ரூ.50 லட்சம் மதிப்பில் டிஜிட்டல் நூலகம் - விரைவில் திறப்பு
பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம் நூலகத்தை ஆய்வு செய்தார்.
உடுமலை:
உடுமலை தளி சாலையில் உள்ள முதல் கிளை நூலகம் 1954-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் தற்போது 18 ஆயிரம் உறுப்பினர்களும், 189 புரவலர்களும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களும் உள்ளன.
இந்நிலையில் இந்த நூலகத்தை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் டிஜிட்டல் நூலகமாக மாற்றி அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
இதன்படி போட்டித்தேர்வு பயிற்சிக்கென நவீன வசதிகளுடன் தனிப்பிரிவு, குளிர்சாதன வசதியுடன் கூடிய வீடியோ கான்பிரன்ஸ் அரங்கம், கலர் ஜெராக்ஸ் எந்திரம் கூடுதலாக ஆயிரக்கணக்கான புத்தகங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப்பிரிவு, பார்வையற்றோர்களுக்கான பிரெய்லி முறை, காதொலி கேட்கும் வசதி உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் இந்த நூலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் நூலகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைக்க இசைவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம் நூலகத்தை ஆய்வு செய்தார். ஆய்வின்போது நூலகர் பீர்பாஷா, நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் சண்முகசுந்தரம், குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.