செய்திகள்
வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆவூர்:
குளத்தூர் தாலுகா, மாத்தூர் அருகே உள்ள ராசாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 50). விவசாயி. இவரது மனைவி வனஜா (45). இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தங்களது இரு மகன்களுடன் ஹாலில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் அவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த வனஜாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதனால் திடுக்கிட்டு எழுந்த வனஜா மர்ம நபரிடமிருந்து தங்க செயினை இறுக பிடித்து சத்தம் போட்டார். சதாசிவம் மற்றும் அவர்களது மகன்கள் எழுந்து மின்விளக்கை போடுவதற்குள் மர்மநபர் செயினை அறுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து சதாசிவம் மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன், மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சதாசிவம் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.