செய்திகள்
நவீன உபகரணங்கள் இல்லாததால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் தவிக்கும் மருத்துவர்கள்
கால்நடைகளுக்கு ஊசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சையின்போது அசையாமல் இருப்பதற்காக ஒருவர் பிடித்துக் கொள்ள வேண்டும்.
குடிமங்கலம்:
உடுமலை சுற்றுப்பகுதியில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன.
இதற்கென உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் கிளை கால்நடை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதன்படி ஒவ்வொரு மருத்துவமனை மற்றும் கிளை நிலையங்களுக்கு ஏற்றாற்போல் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இதில் மாடுகளுக்கு சிகிச்சையளிப்பது கால்நடை டாக்டர்களுக்கு சவாலாக உள்ளது.
ஏனெனில் கால்நடைகளுக்கு ஊசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சையின்போது அசையாமல் இருப்பதற்காக ஒருவர் பிடித்துக் கொள்ள வேண்டும். இருந்தும் சிகிச்சையின் போது கால்நடைகள் அசைவதால் டாக்டர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண நவீன உபகரணங்கள் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:-
தற்போது, கோமாரி நோய் பரவுவதை தடுக்க தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் கால்நடைகளை அசையாமல் பிடித்தும் கொள்ளும் நவீன உபகரணங்கள் கிடையாது.
இதனால் ஊசி செலுத்துவதற்கு நேரம் விரயமாகிறது. பிற மாவட்டங்களில் அவற்றை அசையாமல் பிடித்துக்கொள்ளும் வகையில் நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.