செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் வேலைவாங்கி தருவதாக ரூ.27 லட்சம் மோசடி - 3 பேர் மீது வழக்குப்பதிவு
மின்வாரிய அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.27 லட்சம் மோசடி ெசய்ததாக அரசு பள்ளி ஆசிரியை உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா மின்னல் கிராமத்தை சேர்ந்தவர் அருளானந்தம். இவரது மனைவி நரசிங்கபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அதே பள்ளியில் அவருடன் ஆசிரியையாக வேலை பார்ப்பவர் விஜயலட்சுமி (வயது 42). இவருக்கும், அருளானந்தத்தின் குடும்பத்தினருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் விஜயலட்சுமியின் தந்தையும் ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான மணி (65) என்பவர் அருளானந்தத்திடம், உங்களது மகன், மகளுக்கு மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக வேலை வாங்கி தருவதாக கூறினார்.
இதை நம்பிய அருளானந்தம் ரூ.27 லட்சத்தை கடந்த 2015-ம் ஆண்டு மணியிடம் கொடுத்துள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை மணி, விஜயலட்சுமி தரப்பினர் திருப்பி கொடுக்கவில்லை. இவர்களுக்கு புதுச்சேரியை சேர்ந்த குகன் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். வேலை வாங்கி தராததால் அருளானந்தம் பணத்தை மீண்டும் திருப்பி கேட்கவே அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து அவர் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். புகாரின்பேரில் மணி உள்பட 3 பேர் மீது இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.