செய்திகள்
சிறை

திருச்செங்கோட்டில் லஞ்சம் வாங்கி கைதான வருவாய் ஆய்வாளர் சிறையில் அடைப்பு

Published On 2021-11-03 04:10 GMT   |   Update On 2021-11-03 04:10 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் லஞ்சம் வாங்கியதாக கைதான வருவாய் ஆய்வாளர் ராசிபுரம் கிளைசிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சூவிழிராஜா. விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் எலச்சிபாளையத்தில் உள்ளது. இந்த நிலத்தை அளவீடு செய்வதற்காக அவர் எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் (வயது 48) மனு கொடுத்தார். ஒரு மாத காலமாக நிலத்தை அளவீடு செய்து கொடுக்காமல் பரமேஸ்வரன் காலம் தாழ்த்தி வந்தார்.

இதுகுறித்து சூவிழிராஜா வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் கேட்டார். அதற்கு அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் தான் உடனடியாக நிலத்தை அளவீடு செய்து கொடுக்க முடியும் என்று கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சூவிழிராஜா, இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை சூவிழிராஜாவிடம் வழங்கினர். அவர் போலீசார் கூறியப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் ரூ.5 ஆயிரத்தை வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் வழங்கினார். அதனை அவர் பெற்றுக் கொண்டார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் பரமேஸ்வரனை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பரமேஸ்வரனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ராசிபுரம் கிளைசிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News