செய்திகள்
வாலிபர் தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் தகராறு: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-10-29 18:46 IST   |   Update On 2021-10-29 18:46:00 IST
மனைவி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கீரனூர்:

கீரனூரை அடுத்த டி.கீழையூர் குமரப்பட்டியை சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மகன் ரமேஷ் (வயது 27). கூலித்தொழிலாளி. இவருக்கு காயத்திரி என்ற மனைவியும் 2 மகன் ஒரு மகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் காயத்திரி கோபித்துக்கொண்டு, குழந்தையுடன் நரியம்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷின் மாமனார் ஆறுமுகம், மைத்துனர் சின்ராஜ், காயத்திரியின் தாய்மாமன் குமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு குமரப்பட்டியில் உள்ள ரமேஷ் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த ரமேஷிடம் தகராறு செய்து கம்புகளால் அவரை சரமாரியாக அடித்துள்ளனர்.

இதில் ரமேஷ் காயமடைந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஊரார் முன்னிலையில் தன்னை அடித்து அவமானப்படுத்தியதை தாங்கமுடியாமல் விரக்தியடைந்த ரமேஷ் நேற்று காலை வீட்டின் அருகிலுள்ள தோட்டத்தில் மரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த உடையாளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம், சின்ராஜ், குமார் ஆகியோரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Similar News