செய்திகள்
கொலை

ஜாமீனில் வந்த வாலிபர் கத்தியால் குத்திக்கொலை- 2 பேர் வெறிச்செயல்

Published On 2021-10-22 03:50 GMT   |   Update On 2021-10-22 03:50 GMT
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சிறுவத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. பெயிண்டரான இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சீனி மகன் ராஜாங்கம் (வயது 27) என்பவர் 4-வது குற்றவாளியாக சேர்த்து தேவகோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்ககோரி ராஜாங்கம் கோர்ட்டில் மனு செய்தார். இதனை விசாரித்த கோர்ட்டு தினமும் காலை, மாலையில் திருவேகம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்துபோட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ராஜாங்கத்துக்கு ஜாமீன் வழங்கியது. இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜாங்கம் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு ராஜாங்கம் திருமணவயல் கிராமத்தில் உள்ள ஓட்டலில் உணவு வாங்கி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த பாவன கோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பிரபு (28), கோட்டூரை சேர்ந்த பூமி மகன் மணி (25) ஆகியோர் கொலை தொடர்பாக ராஜாங்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பிரபு, மணி ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜாங்கத்தை சரமாரியாக குத்தினர். 11 இடங்களில் கத்திக்குத்துப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

பின்னர் 2 பேரும் ராஜாங்கத்தின் உடலை அங்கிருந்த புதருக்குள் போட்டுவிட்டு சென்றனர். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ராஜாங்கத்தின் உடல் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலையாளிகளை பிடிக்க தேவகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டி, மாணிக்கம் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அதே பகுதியில் பதுங்கி இருந்த பிரபுவை போலீசார் கைது செய்தனர். மணியை தேடி வருகின்றனர்.

பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News