செய்திகள்
பிரேமலதா விஜயகாந்த்

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் அவதி - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

Published On 2021-10-21 19:59 GMT   |   Update On 2021-10-21 19:59 GMT
மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர்:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் தனது மூத்த மகன் விஜய பிரபாகரனுடன் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலுக்கு வந்து, சாமி தரிசனம் செய்தார்.

அதைத்தொடர்ந்து அவர், தே.மு.தி.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாளுக்கு நாள் அதிகாித்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் சாமானிய மக்கள் தவித்து வருகிறார்கள். விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது கண்டிக்கத்தக்க விஷயம்.

செங்கல், சிமெண்டு, ஜல்லி, கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையும் 40 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் மட்டுமல்லாமல், நடுத்தட்டு மக்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று குறைவான நாட்களே ஆகி இருப்பதால் இப்போதைக்கு சாதகமும் இல்லை. பாதகமும் இல்லை. இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Tags:    

Similar News