செய்திகள்
கைது

பெரம்பலூரில் இலங்கை அகதி என்பதை மறைத்து பாஸ்போர்ட் எடுத்த 2 பேர் கைது

Published On 2021-10-17 15:42 GMT   |   Update On 2021-10-17 15:42 GMT
பெரம்பலூரில் இலங்கை அகதி என்பதை மறைத்து பாஸ்போர்ட் எடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்:

இலங்கையில் இருந்த அகதியாக வந்த வேலாயுதம்பிள்ளை மகன் ஸ்ரீகாந்த் ராஜா (வயது 44) என்பவர் பெரம்பலூர் இலங்கை அகதிகளில் முகாமில் தங்கி வசித்து வருகிறார். டிவி மெக்கானிக்கான இவர் 2009 -ம் ஆண்டு எறையூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகள் தனலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டு 2011-ம் ஆண்டு வரை பெண் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

அப்போது எறையூரில் தங்கியிருந்த வீட்டின் முகவரியை வைத்து வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் மற்றும் பான்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ளார். இந்த ஆவணங்களை பயன்படுத்தி கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந்தேதி தான் இலங்கை அகதி என்பதை மறைத்து இந்திய பாஸ்போர்ட் எடுத்துள்ளார்.

இதேபோல் இலங்கையில் இருந்த அகதியாக வந்த சுப்பையா மகன் சூனிக் கண்ணன் (எ) சுதர்சன் (40) என்பவர் பெரம்பலூர் இலங்கை அகதி முகாமில் தங்கி வசித்து வந்தார். அதே முகாமைச் சேர்ந்த தவராசா மகள் மிதுனரூபி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் பெரம்பலூர் பாலக்கரையில் தள்ளு வண்டியில் சிப்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.

2011-ம் ஆண்டு குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட காரணத்தினால் இலங்கை அகதிகள் முகாம் பதிவேட்டிலிருந்து இவரது பெயர் நீக்கப்பட்டு பெரம்பலூர் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டார். 2011-லிருந்து 2018 வரை திருச்சி பொன்மலைப்பட்டியில் தங்கியிருந்தார். தற்போது சுதர்சன் பார்க்கவன் தெரு, நெடுவாசல் சாலை, துறைமங்கலம், பெரம்பலூர் என்ற முகவரியில் தங்கியுள்ளார்.

ஏற்கனவே திருச்சி பொன்மலைப்பட்டி தங்கியிருந்த வீட்டின் முகவரியை வைத்து பெற்றிருந்த வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேசன் கார்டு ஆகியவற்றை பெரம்பலூர் முகவரிக்கு மாற்றம் செய்து அந்த ஆவணங்களை பயன்படுத்தி சுதர்சன் என்ற பெயரில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந்தேதி தான் இலங்கை அகதி என்பதை மறைத்து இந்திய பாஸ்போர்ட் எடுத்துள்ளார். சூனிகண்ணன் (எ) சுதர்சன் மீது திருச்சி மாவட்டம், பொன்மலை, உப்பிலியபுரம், தாரபுரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 4 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இது குறித்து பெரம்பலூர் கியூ பிராஞ்ச் போலீசார் வழக்குப்பதிந்து இலங்கை அகதி என்பதை மறைத்து இந்திய பாஸ்போர்ட் எடுத்த ஸ்ரீகாந்த்ராஜா, சுதர்சன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News