செய்திகள்
கோப்புபடம்

குறிஞ்சிப்பாடி அருகே கைப்பந்து விளையாடிய மாணவர் பலி

Published On 2021-10-17 09:05 GMT   |   Update On 2021-10-17 09:05 GMT
குறிஞ்சிப்பாடி அருகே கைப்பந்து விளையாடிய மாணவர், திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி:

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தையல் குணம் பட்டினம் அம்பானி நகரை சேர்ந்தவர் ராஜா. தொழிலாளி. இவரது மகன் பகவதி(வயது 16). இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று பள்ளி விடுமுறை நாள் என்பதால், பகவதி தனது சக நண்பர்களுடன் அருகில் உள்ள ரங்கநாதபுரம் குளக்கரையில் கைப்பந்து விளையாடி கொண்டிருந்தார். அப்போது பந்து அருகில் கிடந்த முட்புதர் உள்ளே சென்றது. இதையடுத்து பகவதி உள்ளே சென்று பந்தை எடுத்து வந்தார். அப்போது, நண்பர்களிடம் தனது காலில் ஏதோ ஒன்று கடித்தது போன்று இருந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் தனக்கு மயக்கம் வருவது போன்று உள்ளது என்று கூறி, தனது வீட்டுக்கு சைக்கிளில் சென்றார். வீட்டுக்கு வந்த சிலநொடிகளில் பகவதி மயங்கி விழுந்தார்.

உடன் அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே பகவதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இது தொடர்பாக பகவதியின் தாய் ஜெயந்தி அளித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பகவதி கைப்பந்து விளையாடிய இடத்தில் ஏதேனும் விஷசந்துகள் கடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், பிரேத பரிசோதனை முடிவில் தான் இறப்பின் காரணம் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News