செய்திகள்
திருட்டு

பெரம்பலூர் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு

Published On 2021-10-16 12:17 GMT   |   Update On 2021-10-16 12:17 GMT
பெரம்பலூர் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் வைத்தியலிங்கம்(வயது 40). இவர் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் மூன்று ரோடு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வைத்தியலிங்கம் வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அவர் மீண்டும் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும் கடையில் கல்லாவில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் மற்றும் சாக்லெட், பால் பாக்கெட்டுகள், குளிர்பானங்கள், சிகரெட் பாக்கெட்டுகள் ஆகியவை திருட்டு போயிருந்தன. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். ஏற்கனவே இந்த மளிகை கடையில் கடந்த ஆண்டு மர்மநபர்கள் பணம், பொருட்களை திருடிச்சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் மூன்று ரோடு அருகே அவ்வையார் தெருவை சேர்ந்த கண்ணனின் மகன் மணிகண்டன் (26) நடத்தி வரும் மளிகை கடையின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் கடையில் பணம் ஏதும் இல்லாததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மளிகை கடையில் திருட்டு நடந்த சம்பவம் வணிகர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News