செய்திகள்
மரணம்

ஆக்சிஜன் அளவு குறைந்ததால் கல்லூரி மாணவி மரணம்- பெற்றோர் அதிர்ச்சி

Published On 2021-10-04 09:16 IST   |   Update On 2021-10-04 09:16:00 IST
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் கல்லூரி மாணவி திடீரென்று உயிரிழந்த சம்பவம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொண்டப்ப நாயக்கன்பாளையம் வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி ஜோதி.

இவர்களுக்கு தமிழரசி, தாரணி (18) ஆகிய 2 மகள்களும், அய்யப்பன் என்ற மகனும் உள்ளனர். 2 மகள்களும் சத்தியமங்கலம் அரசு கலை கல்லூரியில் படித்து வருகின்றனர்.

மாணவி தாரணி பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தாரணி கடந்த 5 நாட்களாக சோர்வாக காணப்பட்டார். இதையடுத்து அவரது தந்தை தாரணியை அழைத்து ஏன் சோர்வாக இருக்கிறாய் என்று கேட்டு உள்ளார். அதற்கு தாரணி தனக்கு ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டு எதுவும் சாப்பிடாமல் இரவு தூங்க சென்று விட்டார்.

இந்நிலையில் காலையில் மாணவி தனது தந்தையிடம் தனக்கு காய்ச்சல் அடிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து பழனிச்சாமி அவரது மனைவி ஜோதி ஆகியோர் தாரணியை அழைத்து கொண்டு சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

அப்போது தாரணியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆக்சிஜன் அளவு மிக குறைவாக இருப்பதாகவும், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூறினர்.

இதையடுத்து தாரணியை அழைத்து கொண்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் மாணவி தாரணி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மாணவி திடீரென இறந்ததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News