செய்திகள்
மின் தடை

ஆசனூர் அருகே மின் தடையால் 50 மலை கிராமங்கள் இருளில் மூழ்கியது

Published On 2021-10-02 09:54 IST   |   Update On 2021-10-02 09:54:00 IST
மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஆசனூர் மலை கிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கபட்டு வருகிறது.

நேற்று மாலை 3 மணி அளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆசனூர், அரேபாளையம், குளியாட, தேவர்நத்தம், கேர்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில்கரை, திங்களூர்,கோட்டமாளம், மாவள்ளம் என 50 மேற்பட்ட மலைகிராமங்களில் மின்தடை ஏற்பட்டு இரவு முழுவதும் இருளில் மூழ்கியது.

இதுகுறித்து மின்வாரியத்திடம் கேட்டபோது வனப்பகுதியில் மின்பழுது ஏற்பட்டுள்ளதால் பகல் நேரத்தில் தான் பழுது நீக்கம் செய்ய முடியும் என்று மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதனால் விடிய விடிய பொதுமக்கள் கடும் அவதிபட்டு வந்தனர். சத்திய மங்கலத்தில் இருந்து ஆசனூர் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழமையானதாக இருப்பதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் கூறினர்.

எனவே மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Similar News