செய்திகள்
25 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள் - கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் 25 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.
கிருஷ்ணகிரி:
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு, 3 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான சிறப்பு கூட்டம்நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.50 கோடியே 95 லட்சத்து 48 ஆயிரத்து 148 மதிப்பில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
பின்னர், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 25 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளை வழங்கினார். மேலும், திட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டு, சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், திட்ட அலுவலர் ராஜேஷ் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.