வேலூர் அரசு விடுதியில் சிக்கன் சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கு வாந்தி மயக்கம்
வேலூர்:
வேலூர் ஓட்டேரியில் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி உள்ளது.
இங்கு அரசு முத்துரங்கம் கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் நேற்று முன்தினம் மாணவர்கள் உணவு சாப்பிட்டு தூங்கினர். நேற்று காலை வழக்கம்போல் அவர்கள் கல்லூரிக்கு சென்றனர். வகுப்பில் இருந்த போது 7 மாணவர்களுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.
இதைப்பார்த்த சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவர்கள் சாப்பிட்ட உணவு ஒத்துக் கொள்ளவில்லை என்றும் அதன் காரணமாக அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது என்றனர்.
இதுகுறித்து பாகாயம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மாணவர் விடுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மாணவர்கள் மதியம் விடுதியில் அதிக அளவில் சிக்கன் சாப்பிட்டதாகவும், இரவில் சிலர் வெளியே சென்று சாப்பிட்டுவந்ததாகவும் விடுதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வாந்தி மயக்கம் ஏற்பட்ட மாணவர்களுக்கு இன்று 2-வது நாளாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.