செய்திகள்
காஞ்சீபுரம் அருகே ஷேர் ஆட்டோ-கார் மோதல்: 8 பேர் படுகாயம்
காஞ்சீபுரம் அருகே ஷேர் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தில் இருந்து தாமல் நோக்கி ஷேர் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பாலுசெட்டி சத்திரம் அருகே சென்ற போது, சென்னையில் இருந்து அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக ஷேர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பாலுசெட்டிசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.