செய்திகள்
கைதி

காலாப்பட்டு சிறையில் கைதி மர்ம மரணம்

Published On 2021-09-04 02:44 GMT   |   Update On 2021-09-04 02:44 GMT
காலாப்பட்டு சிறையில் அடிக்கடி செல்போன் உள்ளதா? என போலீசார் சோதனை நடத்துவதாக கூறி அங்குள்ள கைதிகளை அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:

புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 2 பிரிவாக பிரிந்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்கள் முன்பு 16 கைதிகள் சிறையில் உணவு அருந்தும் தட்டினால் கைகளை அறுத்தும், பினாயில் குடித்தும், ஆணிகளை விழுங்கியும் தற்கொலைக்கு முயன்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் விசாரணை கைதி ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

காரைக்கால் டவுன் போலீஸ் நிலையத்தில் மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட அசோக்குமார் (வயது 42) காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரை, சிறைத்துறை அதிகாரிகள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அசோக்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் அசோக்குமார் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காலாப்பட்டு சிறையில் அடிக்கடி செல்போன் உள்ளதா? என போலீசார் சோதனை நடத்துவதாக கூறி அங்குள்ள கைதிகளை அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி அசோக்குமார் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News