செய்திகள்
7 நாட்களுக்கு பிறகு நாகை மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்
நாகை அக்கரைப்பேட்டை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து கடலுக்கு சென்றன.
நாகப்பட்டினம்:
அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடந்த 14-ந்தேதி முதல் 7 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் உறுதியளித்தார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்த நிலையில் 7 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை அக்கரைப்பேட்டை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து கடலுக்கு சென்றன.