செய்திகள்
கைது

வேதாரண்யம் அருகே விவசாயி கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது

Published On 2021-08-20 10:20 GMT   |   Update On 2021-08-20 10:20 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே விவசாயி கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் தெற்குக் காடு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 48) விவசாயி. இவருக்கு திருமணமாகி செந்தாமரை என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ரவி கருப்பம்புலம் கடைவீதிக்கு வந்துவிட்டு வீட்டுக்கு செல்லும்போது சிலர் இவரை வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் ரவி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், இன்ஸ்பெக்டர் சுப்ரியா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக ரவியின் உறவினரான முன்னாள் ராணுவ வீரர் சிவராஜ் (39) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் கொலைக்கான காரணம் என்ன? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது பற்றிய முழு விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News