செய்திகள்
கொள்ளை

சீர்காழியில் அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.32 லட்சம் பணம் திருட்டு

Published On 2021-08-18 16:17 IST   |   Update On 2021-08-18 16:17:00 IST
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.32 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசெல்வம் (வயது 33). இவர் சட்டநாதபுரம் ரவுண்டானா அருகில் மளிகை கடை வைத்துள்ளார்.

இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த ராஜசெல்வம் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ரூ. 25 ஆயிரம் மதிப்புடைய மளிகை பொருட்கள் மற்றும் கல்லாவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதேபோல அருகிலுள்ள வினோத் ஏஜென்சி என்ற இரும்பு கடையை உடைத்து ரூ.25,000 பணத்தை திருடிய மர்ம நபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த 8 சி.சி.டி.வி கேமராக்களில் சிலவற்றை உடைத்து சேதப்படுத்தி தப்பி ஓடினர். மொத்தம் 2 கடைகளிலும் சேர்த்து ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து திருட்டு நடந்த 2 கடைகளையும் பார்வையிட்டு விசாரித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் வடமாநில வாலிபர்கள் சிலர் கடைக்குள் வந்து சென்றதாக பதிவாகி இருந்தது. இதனால் வடமாநில வாலிபர்கள் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருந்தாலும் இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News