செய்திகள்
கொலை

கொள்ளிடம் அருகே மகளிர் குழு கடன் பிரச்சினையில் தொழிலாளி அடித்துக் கொலை

Published On 2021-07-30 17:51 IST   |   Update On 2021-07-30 17:51:00 IST
கொள்ளிடம் அருகே மகளிர் குழு கடன் பிரச்சினையில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் ஜான் (வயது 55). விவசாய கூலி தொழிலாளி. இவர் கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூர் கிறிஸ்துவ தெருவில் தனது மாமனார் வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியிருந்து வந்தார்.

இதே தெருவைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவரின் மனைவி பிலோமினாமேரி (42) ஒரு மகளிர் குழுவில் தலைவியாக இருந்து வருகிறார். இந்த குழுவில் ஜான் மனைவி ஜோஸ்பின் மேரியும் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்தக் குழு மூலம் பெற்ற கடன் தொகையை ஜோஸ்பின் மேரிக்கு முழுமையாக கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று இரவு கிறிஸ்தவ தெருவில் வீட்டு முன்பு பெண்களுக்குள் ஒருவரை ஒருவர் வாய் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆரோக்கியதாஸ் தனது மனைவிக்கு ஆதரவாக ஜான் மனைவி ஜோஸ்பின் மேரியை திட்டினார்.

இதில் ஆத்திரம் அடைந்த ஜான், ஆரோக்கியதாசை தட்டிக் கேட்டார். இதில் ஜானுக்கும் ஆரோக்கியதாசுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் ஜானின் கழுத்தைப் பிடித்து அடித்து கீழே தள்ளியதில் ஜான் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியதாஸை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News