செய்திகள்
புஞ்சைபுளியம்பட்டியில் போலீஸ் என கூறி பணம் பறித்த 2 பேர் கைது
புஞ்சைபுளியம்பட்டியில் போலீஸ் என கூறி பணம் பறித்த 2 பேர் கைதான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புஞ்சைபுளியம்பட்டி:
சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 64). இவர் புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் முன்பு உள்ள ஒரு தனியார் ஜவுளி கடையில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் ஜவுளி கடையின் முன்பு நின்று கொண்டு இருந்த போது, மோட்டார்சைக்கிளில் 2 வாலிபர்கள் அங்கு வந்தார்கள். அதில் ஒருவர் நான் புஞ்சைபுளியம்பட்டிக்கு புதிதாக வந்துள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். ஏன் முககவசம் அணியவில்லை? என்று மிரட்டி அபராதம் கட்டு என 200 ரூபாயை வாங்கி சென்றுவிட்டார்கள்.
அவர்கள் மேல் சந்தேகம் ஏற்பட்டதால், சேட்டு நேற்று காலை புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையம் சென்று நடந்த சம்பவத்தை கூறினார். அதற்கு போலீசார் புதிதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாரும் பணியில் சேரவில்லை என்று கூறினார்கள். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சேட்டுவிடம் பணம் பறித்தவர்களை தேடி வந்தார்கள்.
இந்தநிலையில் புஞ்சைபுளியம்பட்டி டானாபுதூர் போலீஸ் சோதனை சாவடியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் திருப்பூர் மாவட்டம் தண்டுகாரன்பாளையத்தை சேர்ந்த கணேசன் (35), கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்ன கள்ளிபட்டியை சேர்ந்த குணசேகரன் (23) என்பதும், இவர்கள் இருவரும்தான் சேட்டுவிடம் 200 ரூபாய் பறித்தது என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தார்கள்.