செய்திகள்
அந்தியூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் பெண் பலி - போலீஸ் விசாரணை
அந்தியூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்தியூர்:
திருப்பூரை சேர்ந்தவர் சித்ரா (வயது 55). இவருடைய கணவர் பெயர் சுப்பிரமணியன். இவர்களுடைய மகள் விஜயலட்சுமி (33).
சித்ராவும், விஜயலட்சுமியும் அந்தியூர் அருகே உள்ள கணபதி காட்டூரில் கடந்த 4 ஆண்டுகளாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். நேற்று காலை சித்ராவின் வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக திறக்காததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்கள்.
அப்போது வீட்டுக்குள் சித்ரா இறந்து கிடந்தார். அவரின் உடல் அருகிலேயே மகள் விஜயலட்சுமியும் இருந்தார். ஆனால் தாய் இறந்தது அவருக்கு தெரியவில்லை. அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. சித்ராவின் வாயில் நுரை வந்திருந்தது. மூக்கில் ரத்தம் வழிந்திருந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். சித்ரா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது தாக்கப்பட்டு இறந்தாரா? என்று தெரியவில்லை.
பிரேத பரிசோதனைக்கு பின்பு மருத்துவ அறிக்கை கிடைத்த பிறகே அவர் எவ்வாறு இறந்தார் என்று தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தார்கள்.
மனநலம் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.