செய்திகள்
மரணம்

காரைக்குடி அருகே தொண்டைக்குள் மீன் சிக்கியதால் மூச்சுத்திணறி வாலிபர் பலி

Published On 2021-07-20 05:42 GMT   |   Update On 2021-07-20 05:42 GMT
தற்போது தொடர் மழை காரணமாக கண்மாய் நிரம்பி உள்ளது. அதனால் மீன்களும் அதிக அளவில் உள்ளன. இந்த நிலையில் அங்கு மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சின்ன குன்றக்குடி கிராமத்தில் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் அடிக்கடி மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

தற்போது தொடர் மழை காரணமாக கண்மாய் நிரம்பி உள்ளது. அதனால் மீன்களும் அதிக அளவில் உள்ளன. இந்த நிலையில் அங்கு மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மீன்பிடிக்க அதிகாலையிலேயே கண்மாயில் திரண்டனர். அவர்கள் மீன்பிடி திருவிழா தொடங்கியதும் கண்மாயில் இறங்கி ஆர்வத்துடன் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர்.

கீழச்சிவல்பட்டி அருகே உள்ள மான்கொம்பு பகுதியைச் சேர்ந்த இளையராஜா (வயது 30) என்பவரும் கண்மாயில் மீன் பிடித்தார்.

அதிக மீன்கள் பிடிக்கும் ஆசையில் இருந்த இளையராஜா தனது கையில் சிக்கிய ஒரு மீனை வாயில் வைத்துக் கொண்டு மேலும் மீன்களை பிடிக்கும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். அப்போது அவரது வாயில் இருந்த மீன் நழுவியது. அதனை விடாமல் பிடிக்க இளையராஜா முயன்றபோது அந்த மீன் அவரது தொண்டைக்குள் சிக்கி கொண்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளையராஜா கையால் மீனை வாய்க்குள் இருந்து எடுக்க முயன்றார். ஆனால் அதற்குள் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

மயக்க நிலைக்கு ஆளான இளையராஜாவை அங்கிருந்தவர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இளையராஜா பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News