செய்திகள்
பூம்புகார் அருகே தனியார் பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி
பூம்புகார் அருகே தனியார் பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெண்காடு:
பூம்புகார் சுனாமி நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி, இவரது மகன் அரவிந்த் (வயது 25). சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இந்தநிலையில் நேற்று மதியம் பூம்புகாரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி மோட்டார் சைக்கிளில் அரவிந்த் சென்று கொண்டிருந்தார். பூம்புகார் அருகே தர்மகுளம் பகுதியில் சென்றபோது பூம்புகாரில் இருந்து சீர்காழி நோக்கி வந்த தனியார் பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அரவிந்த்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அரவிந்த் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.