செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: முதலமைச்சர் ரங்கசாமியிடம் வலியுறுத்துவேன்- கவர்னர் தமிழிசை

Published On 2021-07-11 10:17 IST   |   Update On 2021-07-11 10:17:00 IST
அமைச்சர்கள் பதவி ஏற்று 2 வாரங்கள் ஆகியும் இன்னும் அவர்களுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. இதற்கு காரணம் முக்கிய இலாகாக்களை பா.ஜனதா கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி:

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்- அமைச்சராக ரங்கசாமி கடந்த மே மாதம் 7-ந்தேதி பதவி ஏற்றார்.

கூட்டணி மந்திரி சபையில் என்.ஆர். காங்கிரசுக்கு 3 அமைச்சர் பதவியும், பா.ஜனதாவுக்கு 2 அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் கடந்த 27-ந்தேதி பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சர்கள் பதவி ஏற்று 2 வாரங்கள் ஆகியும் இன்னும் அவர்களுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. இதற்கு காரணம் முக்கிய இலாகாக்களை பா.ஜனதா கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர்களுக்கு விரைவில் இலாகாக்களை ஒதுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவது சம்பந்தமாக எனது விருப்பத்தை ரங்கசாமியிடம் கூறுவேன் என கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுவை வீராம்பட்டினத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழாவை தொடங்கி வைத்த பின் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனாவை முதலில் ஒழித்து விட்டால் அதன் பிறகு வளர்ச்சி திட்டங்களில் நாம் கவனம் செலுத்தலாம். முதல்-அமைச்சருடன் இணைந்து கவர்னர் அலுவலகமும் பல வளர்ச்சி திட்டங்களுக்கான முயற்சிகளை முன்னெடுத்து செல்லும்.

அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது மட்டும் தான் என்னுடைய வேலை. கவர்னர் என்ற முறையில் கூட்டணி கட்சிக்குள் நடக்கும் பேச்சுவார்த்தையில் நான் தலையிட முடியாது.

ஆனால், மக்கள் மீது அக்கறை கொண்ட ஒருவராக விரைவில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டு அதன் மூலம் அவர்களுடைய பணிகளை செய்வதற்கான என்னுடைய ஆரோக்கியமான ஆலோசனைகளை சொல்லலாம்.

இது தொடர்பாக எனது விருப்பத்தை முதல்-அமைச்சரிடம் கூறுவேன்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய சுற்றுலாத்துறை மந்திரியுடன் கலந்தாலோசித்து புதுவையை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Similar News