செய்திகள்
கைது

லாட்ஜில் அறை வாடகைக்கு எடுத்து ஆன்லைன் சூதாட்டம்- 4 பேர் கும்பல் கைது

Published On 2021-07-09 15:03 IST   |   Update On 2021-07-09 15:03:00 IST
லாட்ஜில் அறை வாடகைக்கு எடுத்து ஆன்லைன் சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, நேதாஜி வீதியை சேர்ந்தவர் குமரேசன் (23). இவர் பெருந்துறை பஸ் நிலையம் எதிரில் உள்ள ஒரு லாட்ஜில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று குமரேசன் பணியில் இருந்தபோது ஈரோட்டை சேர்ந்த சக்திவேல் என்பவர் அறை வாடகைக்கு வேண்டும் என்று கேட்டார்.

இதையடுத்து சக்திவேலுக்கு அறை வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து சிலர் அந்த அறைக்கு வந்து சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் மேலாளர் குமரேசன் அந்த அறைக்கு சென்று பார்த்தார்.

அப்போது செல்போனில் ஆன்லைனில் அவர்கள் லாட்டரி சூதாட்டம் நடத்தி கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பெருந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது ஆன்லைன் சூதாட்டமாடுவது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் ஈரோடு, அசோகபுரத்தை சேர்ந்த கோபி என்கிற வெங்கடாச்சலம் (36), வீரப்பன்சத்திரம், எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்த காளி முத்துக்குமார் (26), நேரு வீதியை சேர்ந்த விக்னேஸ்வரன் (26), ஏ.எஸ்.ஜி. வீதியை சேர்ந்த சக்திவேல் (41) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து சூதாட்ட பணத்தையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆசீப் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News