செய்திகள்
தற்கொலை

மேட்டுப்பாளையத்தில் நண்பன் இறந்த வேதனையில் தச்சு தொழிலாளி தற்கொலை

Published On 2021-07-08 09:28 GMT   |   Update On 2021-07-08 09:28 GMT
மேட்டுப்பாளையத்தில் நண்பன் இறந்த வேதனையில் தச்சு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

அரியாங்குப்பம் கோட்டைமேடு ராகவ செட்டியார் வீதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது சகோதரர் ராஜீ (வயது23). தச்சு தொழிலாளி. இவர் மேட்டுப்பாளையத்தில் தனியாக வசித்து வந்தார்.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ராஜீவின் நண்பரான தேங்காய்திட்டை சேர்ந்த அய்யப்பன் என்பவர் இறந்து விட்டார். நண்பன் இறந்தது முதல் ராஜீ வருத்தத்தில் இருந்து வந்தார்.

இந்த வருத்தத்தில் ராஜீ அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். ஆனாலும் நண்பனின் மறைவு ராஜீயின் மனதைவிட்டு அகலவில்லை. தினமும் இறந்து போன நண்பரை நினைத்து விரக்தியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை ராஜீ தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தான் குடியிருந்த வீட்டில் தாயாரின் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். உடனே பக்கம் பக்கத்தினர் ராஜீயை தூக்கில் இருந்து மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது சகோதரர் மோகன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News