செய்திகள்
மரணம்

புதுவை காமராஜர்நகரில் நகராட்சி என்ஜினீயர் மர்ம மரணம்

Published On 2021-07-08 14:51 IST   |   Update On 2021-07-08 14:51:00 IST
புதுவையில் நகராட்சி என்ஜினீயர் மர்மமான முறையில் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
புதுச்சேரி:

நாகை மாவட்டம் மருதூர் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது57). புதுவை நகராட்சியில் இளநிலை என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

திருமணம் ஆகாத இவர் புதுவை காமராஜர் நகரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். இவரும் வில்லியனூர் கட்டிட மையத்தில் இளநிலை என்ஜினீயராக வேலை செய்து வரும் லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்த கல்யாணசுந்தரம் (56) என்பவரும் நண்பர்கள். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வது வழக்கம்.

கடந்த 3 நாட்களாக கல்யாணசுந்தரம் செல்போனில் முருகானந்தத்திடம் பேச முயன்றார். ஆனால் முருகானந்தம் போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகமடைந்த கல்யாணசுந்தரம் நேற்று முருகானந்தம் வசித்து வந்த வீட்டுக்கு சென்றார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டியிருந்த நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து கல்யாண சுந்தரம் பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் முருகானந்தம் உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து உடல்நலக்குறைவால் முருகானந்தம் இறந்து போனாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News