செய்திகள்
ஈரோடு அருகே மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 12½ பவுன் நகை- ரூ.1½ லட்சம் கொள்ளை
ஈரோடு அருகே பட்டப்பகலில் மின் வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 12½ பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
மொடக்குறிச்சி:
ஈரோட்டை அடுத்த வெண்டிபாளையம் மணலி கந்தசாமி வீதியை சேர்ந்தவர் கணபதி (வயது 66). ஓய்வுபெற்ற மின்சார வாரிய ஊழியர். இவருடைய மனைவி ஜோதி (53). இவர்களுடைய மகன் அருண் ஆதித்யா (36).
இந்த நிலையில் தர்மபுரியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கணபதி நேற்று சென்றுவிட்டார். காங்கேயத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மனைவி ஜோதி சென்றுவிட்டார். பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் பேப்பர் மில்லுக்கு மகன் அருண் ஆதித்யா வேலைக்கு சென்றுவிட்டார்.
மாலையில் வேலை முடிந்ததும் அருண் ஆதித்யா வீட்டுக்கு வந்து உள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12½ பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்தை காணவில்லை.
யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே ெசன்று அங்கிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் துணிகரமாக வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.