செய்திகள்
கோப்புபடம்

புதுச்சேரி அருகே செல்போனில் பதிவு செய்து தூக்கில் தொங்கிய இளம்பெண்

Published On 2021-07-07 17:04 IST   |   Update On 2021-07-07 17:04:00 IST
புதுவை காந்திநகரில் கடன் வாங்கி பணம் கொடுத்ததை வாலிபர் தராமல் ஏமாற்றியதால் செல்போனில் பதிவு செய்து தூக்கில் தொங்கிய இளம் பெண் இறந்து போனார்.

புதுச்சேரி:

புதுவை காந்திநகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முகமது சய்த். இவரது மகள் அஸ்மா (வயது19). 8-ம் வகுப்பு வரை படித்திருந்த அஸ்மா எல்லைப்பிள்ளைச் சாவடியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஒரு வருடமாக அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதற்கிடையே அஸ்மா சென்னையை சேர்ந்த முரளி(25) என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு பல இடங்களில் பணம் கடன் வாங்கி அஸ்மா கொடுத்திருந்தாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் கடந்த சில மாதங்களாக முரளி அஸ்மாவிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் அஸ்மா மன விரக்தியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை அஸ்மா தனது தங்கை நஸ்ரினை வீட்டின் வெளியே விளையாட செல்லுமாறு கூறி அனுப்பி விட்டு வீட்டின் முன் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். வெகுநேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த நஸ்ரின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது தனது அக்காள் அஸ்மா மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அலறல் சத்தம் போட்டார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த கதவை உடைத்து தூக்கில் தொங்கிய அஸ்மாவை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அஸ்மா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அஸ்மா தற்கொலை செய்துகொள்ளும் முன்பு தான் தூக்குபோட்டு தொங்குவதை செல்போனில் பதிவு செய்திருந்தார். மேலும் மற்றொரு பதிவில் சென்னையை சேர்ந்த முரளி என்பவருடன் பழகி வந்ததாகவும், அவருக்கு பணம் கடன் வாங்கி கொடுத்து இருந்ததாகவும், அந்த பணத்தை முரளி தராமல் ஏமாற்றி விட்டதால் தான் தற்கொலை செய்து கொள்வதாக பதிவிட்டு இருந்தார்.

இதுகுறித்து அஸ்மாவின் சகோதரர் சாஹித் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Similar News