செய்திகள்
திருமணம் ஆன 2 நாளில் புதுப்பெண் தற்கொலை
கடலூரில் திருமணம் ஆன 2 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகள் மணிமேகலை (வயது 27). பி.எஸ்சி. நர்சிங் படித்து முடித்துள்ள இவர் சென்னையில் உள்ள ஒரு கண் கண்ணாடி கடையில் கண் பரிசோதனை செய்யும் பிரிவில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மணிமேகலைக்கும், பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்த குப்புசாமி என்பவருக்கும் கடந்த 28-ந்தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் 30-ந்தேதி மணிமேகலை தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். பின்னர் உடை மாற்றி வருவதாக வீட்டில் உள்ள அறைக்கு சென்ற அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மணிமேகலைக்கு திருமணமாகி 2 நாட்களே ஆவதால், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து சிதம்பரம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.