செய்திகள்
கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி - புதிதாக 122 பேருக்கு பாதிப்பு உறுதி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானர்கள். புதிதாக 122 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 57 ஆயிரத்து 499 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 122 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
இவர்களில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் இருந்து கடலூர், விருத்தாசலம் வந்த 5 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நெய்வேலியை சேர்ந்த ஒருவருக்கும் பாதிப்பு உறுதியானது. இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 23 பேருக்கும், நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 93 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 55 ஆயிரத்து 412 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று 245 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர்.
நெய்வேலியை சேர்ந்த 53 வயது ஆண், 84 வயது முதியவர் சென்னை தனியார் மருத்துவமனையிலும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 71 வயது முதியவர் கடலூர் அரசு மருத்துவமனையிலும் சளி, காய்ச்சல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு உமிழ் நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 3 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 751 ஆக உயர்ந்தது.கொரோனா பாதித்த 1031 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 182 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மாவட்டத்தில் 90 கட்டுப்பாட்டுப் பகுதியாக குறைந்தது.