செய்திகள்
ராஜேஷ்

கொரோனா வார்டில் வங்கி அதிகாரி பலி- ஆக்சிஜன் துண்டிக்கப்பட்டதால் இறந்ததாக மனைவி புகார்

Published On 2021-06-25 05:03 GMT   |   Update On 2021-06-25 05:03 GMT
மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் குழாயில் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அருகில் உள்ள மற்ற வார்டுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 40). இவர், நாகையில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருணமாகி சுபா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ராஜேசுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கடந்த 12-ந் தேதி சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு துணையாக அவரது மனைவி சுபா உடன் இருந்தார்.

இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் நேற்று முன்தினம் இரவு திடீரென உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சுபா கதறி அழுதார்.

அப்போது அவர் கூறுகையில், மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் குழாயில் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அருகில் உள்ள மற்ற வார்டுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட கசிவை சரி செய்ய ஆக்சிஜன் நிறுத்தப்பட்டது. ஆக்சிஜனை நிறுத்தியதால் தான் எனது கணவர் ராஜேஷ் இறந்தார் என்று அவர் பரபரப்பு புகார் தெரிவித்தார். தகவல் அறிந்து ராஜேசின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள், ஆக்சிஜனை நிறுத்தியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி சென்று மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் மற்றும் டாக்டர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், தவறு நடந்து இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News