அதல பாதாளத்திற்கு சென்ற பூக்கள் விலையால் கமிஷன் கடைகள் மூடல்
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, அணவயல், மேற்பனைக்காடு, குலமங்கலம், பனங்குளம், பெரியாளூர், நெய்வத்தளி, மழையூர், சம்பட்டிவிடுதி, திருவரங்குளம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது.
இப்பகுதியில் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 டன் வரை மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, ரோஜா, அரளி, பிச்சி, செண்டி உள்ளிட்ட பல்வேறு மலர்களும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் மலர்கள் மிகப்பெரிய கமிஷன் கடைகளைக் கொண்ட கீரமங்கலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு பகுதியில் உள்ள கமிஷன் கடைகளுக்கு விவசாயிகள் நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்கின்றனர்.
இதனை புதுக்கோட்டை, தஞ்சை திருச்சி, சிவகங்கை உள்பட பல மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கால் பூக்களின் விலை மிகவும் குறைந்து, ஒரு கிலோ ரூ.5 வரை குறைவாக விற்பனை ஆனது. இதனால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுகூட கிடைக்காமல் தவித்து வந்தனர். மேலும் பூக்கள் விற்பனை ஆகாமல் ஒரு நாளைக்கு சுமார் 3 டன் வரை குப்பையில் கொட்டி வந்தனர்.
இந்த நிலையில், கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் கொரோனா பரவல் அதிகரித்து, உயிர் பலிகளும் அதிகரித்துள்ளதால் கடந்த 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை அனைத்து பூ கமிஷன் கடைகளையும் மூட கமிஷன் கடை உரிமையாளர்கள் சங்கத்தில் முடிவெடுத்து கடைகளை அடைத்தனர்.
இது குறித்து பூ விவசாயிகள் கூறுகையில், இந்த கமிஷன் கடை அடைப்பால் ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 முதல் 15 டன்கள் வரை பூக்கள் செடியிலேயே வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வருடமாக கஜா புயல் தொடங்கி கொரோனா என தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதால், அரசு உரிய இழப்பூடு வழங்கினால் விவசாயிகள் கடன் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம் என்றார்.