ஆற்காடு அருகே குழந்தை பெற்றெடுத்த 14 வயது சிறுமி- 75 வயது முதியவரிடம் விசாரணை
ஆற்காடு:
ஆற்காடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தாயின் அரவணைப்பில் இருந்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். முதியவர் அவரது குடும்பத்தினருக்கு பணம் மற்றும் பொருள் உதவி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் அவரது தாய் இல்லாத போது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார்.
நேற்று முன்தினம் சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சிறுமிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து சைல்டு லைன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் சிறுமியின் வீட்டிற்கு சென்று அங்கு நடத்திய விசாரணையில் 75 வயது முதியவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பினர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி (பொறுப்பு) போக்சோவில் வழக்குப்பதிவு செய்து முதியவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.