செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் பலத்த மழை

ஜெயங்கொண்டத்தில் இடி, காற்றுடன் பலத்த மழை

Published On 2021-05-11 10:18 GMT   |   Update On 2021-05-11 10:18 GMT
ஜெயங்கொண்டத்தில் கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக வெப்பம் தணிந்து பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்:

அக்னி நட்சத்திரம் காரணமாக கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து, அனல் காற்று வீசி பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.

இதையடுத்து வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கடந்த சில நாட்களாகவே சுட்டெரித்த வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்த நிலையில், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இதைத்தொடர்ந்து மதியம் சுமார் 3 மணி அளவில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது. மிதமாக பெய்ய தொடங்கிய மழை, பின்னர் இடியுடன் கூடிய பலத்த மழையாக மாறி சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. அப்போது காற்றும் வீசியது.

கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைத்த நிலையில் ஜெயங்கொண்டத்தில் கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக வெப்பம் தணிந்து பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News