செய்திகள்
கோப்பு படம்.

கொள்ளிடம் அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி

Published On 2021-05-10 14:24 GMT   |   Update On 2021-05-10 14:24 GMT
கொள்ளிடம் அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு சுனாமி நகரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 44). இவர், நேற்று காலை அதே ஊரை சேர்ந்த 5 பேருடன் பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.

இவர்கள் 6 பேரும் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடலில் படகு கவிழ்ந்தது. இதனால் கடலில் தத்தளித்தபடி மீனவர்கள் நீந்தி சென்று அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்றொரு படகில் ஏறி உயிர் தப்பினர். நடராஜன் மட்டும் கடலில் மாயமாகி விட்டார்.

உடனே அந்த படகில் இருந்த மீனவர்களின் ஒத்துழைப்புடன் தங்களுடன் மீன் பிடிக்க வந்த நடராஜனை தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டனர். 3 மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் நடராஜனை பிணமாக மீட்டனர். இதைத்தொடர்ந்து அவரது உடலை பழையாறு கடற்கரைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News