செய்திகள்
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
பயணிகள் முககவசம் அணியாவிட்டால் டிரைவர், கண்டக்டர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர்.
அரியலூர்:
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியலூர் பஸ் நிலையத்தில் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) மனோகரன், துப்புரவு ஆய்வாளர் முத்துமுகமது உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள், பயணிகள் முககவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். பயணிகள் முககவசம் அணியாவிட்டால் டிரைவர், கண்டக்டர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர். மேலும் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. மேலும் கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பஸ் நிலையங்களிலும், சாலைகளிலும் ஆய்வு செய்யப்படும்போது பொதுமக்கள் முககவசம் அணிகின்றனர். பின்னர் அவற்றை கழற்றி தங்கள் பையில் வைத்து செல்கின்றனர். அவ்வாறு செய்வதால் தொற்று பரவும் என்பதை அவர்கள் உணர்ந்தால் மட்டுமே, கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும். எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம் அணிந்த வர வேண்டும், என்றனர்.