செய்திகள்
கைது

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது

Published On 2021-04-19 02:43 GMT   |   Update On 2021-04-19 02:43 GMT
காஞ்சீபுரத்திலிருந்து பெங்களூருக்கு லாரியில் கடத்தப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அணைக்கட்டு:

காஞ்சீபுரத்தில் இருந்து பள்ளிகொண்டா சுங்கச்சாவடி வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் பானுவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படை தாசில்தார் கோடீஸ்வரன், காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபிரகாஷ ஆகியோர் கொண்ட குழு நேற்றுமுன் தினம் இரவு 12 மணிக்கு பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி விசாரணை செய்தனர். விசாரணையில் லாரியில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் லாரியில் இருந்தவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் சிறு காவேரிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல் (வயது 32), தினேஷ் (28) என்பது தெரியவந்தது. மேலும் காஞ்சீபுரத்தில் இருந்து பெங்களூருக்கு 5 டன் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

அதன்பேரில் லாரியில் கடத்தப்பட்ட 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வேலூர் தொரப்பாடியில் உள்ள வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்திய லாரி, டிரைவர்கள் வெற்றிவேல், தினேஷ் ஆகிய 2 பேரை காட்பாடியில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News