செய்திகள்
ஆம்பூர் அருகே பாம்பு கடித்து கல்லூரி மாணவி பலி
பாம்பு கடித்து கல்லூரி மாணவி பலியான சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர்:
மாதனூரை அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித், கூலித்தொழிலாளி. இவரின் மகள் மோகனா (வயது 15). இவர், குடியாத்தம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் படித்து வந்தார். நேற்று வீட்டில் உள்ள பீரோவுக்கு அடியில் எலியின்வால் போல இருந்தது.
அதைப் பார்த்த மோகனா அந்த வாலை பிடித்து இழுத்துள்ளார். அப்போது அவரை, பீரோவுக்கு அடியில் இருந்து ஏதோ ஒரு விஷ உயிரினம் கடித்துள்ளது. அவர், மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று, தன்னை எலி கடித்து விட்டதாகக் கூறி, சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்து படுத்துள்ளார். சில மணி நேரத்திலேயே மோகனா பரிதாபமாக இறந்து விட்டார். அவரின் குடும்பத்தினர் கதறி துடித்தனர்.
பீரோவை நகர்த்தி தேடியபோது, அதன் அடியில் விஷ பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தனது மகள் பாம்பு கடித்து இறந்து விட்டதாகக் கூறி பெற்றோர் ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.