வேலூரில் குரங்குகள் கூட்டை கலைத்ததால் தேனீக்கள் கொட்டி முதியவர் பலி
வேலூர்:
வேலூர் கஸ்பா சாஸ்திரி நகர் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 85). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இவர் வீட்டை ஒட்டி உள்ள புளிய மரத்தில் பெரியதேன்கூடு உள்ளது. அப்போது அங்கு வந்த குரங்குகள் தேன்கூட்டை கலைத்து விட்டன.
தேன் கூட்டில் இருந்து கிளம்பிய தேனீக்கள் வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த ராமானுஜத்தின் உடல் முழுவதும் கொட்டியது.
ராமானுஜம் வலி தாங்காமல் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு பக்கத்து வீடுகளை சேர்ந்த அலமேலு, காவேரி, சக்தி காந்தா ஆகியோர் அவரை காப்பாற்ற ஓடி வந்தனர். அவர்களையும் தேனீக்கள் கொட்டியது.
இதையடுத்து தேனீ கொட்டியதில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் பெண்ட்லேன்ட் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி ராமானுஜம் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
படுகாயமடைந்த 4 பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குரங்குகள் தேன் கூட்டை கலைத்ததால் தேனீ கொட்டி முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.