செய்திகள்
பனைமரத்தில் கள் இறக்கி மயக்க மருந்து கலந்து விற்றவர் கைது
ஆண்டிமடத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பனைமரத்தில் கள் இறக்கி மயக்க மருந்து கலந்து விற்றவரை கைது செய்தனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீசாருக்கு கூவத்தூர் கிராமத்தில் பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
கூவத்தூர் கிராமத்தில் சென்றபோது போலீசாரை கண்டு 2 பேர் தப்பி ஓட முயன்றனர். அதில் ஒருவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்டவரிடம் விசாரித்தபோது, அவர் அதே பகுதியை சேர்ந்த வில்லியம் ஜோசப்(வயது 45) என்பதும், தப்பி ஓடியவர் டேவிட் (40) என்பதும், வீட்டின் அருகில் உள்ள பனை மரத்தில் கள் இறக்கி விற்றதும், மேலும் கள்ளில் போதைக்காக மயக்க மருந்துகள் கலந்து விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து வில்லியம் ஜோசப்பை கைது செய்த போலீசார் கள்ளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய டேவிட்டை வலைவீசி தேடி வருகின்றனர்.